Wednesday, August 15, 2012

சுதந்திர தினம்: தலைவர் சரத்குமார் வாழ்த்து

சென்னை, ஆக.- 15 - நாடெங்கும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள செய்தி வருமாறு:- நாம் 66-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்வோம். நாம் ஏற்க வேண்டிய சபதங்கள் எத்தனையோ இருப்பினும் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைப் போற்றி பேணிக்காப்பதில் நாம் மேலும் உறுதியான நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும். நம் நாட்டின் உயர்ந்த பாரம்பரிய பண்புகள் பழக்க வழக்கங்களைவிட மேற்கத்திய கலாச்சாரங்கள் உயர்ந்தவை அல்ல. அவற்றிலிருந்து தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும், அவற்றிற்கு  நாம் அடிமையாகிவிடக்கூடாது. ஜனநாயகப்  பண்புகளைப் போற்ற வேண்டும். தனி மனித ஒழுக்கங்களை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா 100 சதவிகிதம் கல்வி வளர்ச்சி பெற்ற நாடாக அறிவிக்கும் பொருட்டு அனைவரும் பாடுபட வேண்டும், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், மகாத்மாகாந்தி, நேருஜி, வல்லபபாய் பட்டேல், திலகர், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் உழைப்பையும், அவர்கள் இந்த தேசத்திற்காக பாடுபட்டதையும் நம் இளைஞர்களுக்கும், சந்ததியினர்களுக்கும் விளக்க வேண்டும். அவர்கள் வழி நடக்க வேண்டும். சமத்துவம் வளர, சமதர்மம் நிலைத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

தீரன் சின்னமலை நினைவிடத்தில் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. அஞ்சலி

சென்னை, ஆக.- 5 - தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு அருகில் ஓடாநிலை என்ற கிராமத்தில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார்.
பெருந்துறையில் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் ஊர்வலமாகச் சென்று தீரன் சின்னமலை நினைவிடம் உள்ள ஓடாநிலை கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்தியபின் அங்கு நடந்த அரசு விழாவிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ.,  பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.ஜெயப்ரகாஷ், துணைப் பொதுச் செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம் ஆகியோருடன் தணியரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர்கள் ஈரோடு தெற்கு கம்பளியாம்பட்டி- செல்வராஜ், ஈரோடு வடக்கு-லாலா கணேசன், ஈரோடு மாநகர்- சின்னச்சாமி, சிவகுமார், நாமக்கல்- சுரேஷ்காந்தி, திருப்பூர் மாநகரம் - ரத்னா ஜெ.மனோகரன், திருப்பூர் தெற்கு - தளி சிவகுமார், திருப்பூர் வடக்கு - அவினாசி முருகேசன், சேலம் மாநகர்- ஜெ.கே.முருகேசன், சேலம் மேற்கு - மைக்கேல் தங்கராஜ், சேலம் கிழக்கு - ஜவஹர், கோவை மாநகர்- ஏ.கணேசன், கோவை வடக்கு - பி நேருஜி, கோவை தெற்கு - எஸ்.ஜெய்சங்கர், கரூர் - பி.மனோகரன், ஐ.கே.டி, தங்கவேல், திருச்சி மாநகர் - ஏ.பி.மஹேஷ்வரா, திருச்சி புறநகர் டி.முரளிகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.