Wednesday, June 1, 2011

குற்றால அருவி பகுதிகளில் சரத்குமார் MLA ஆய்வு

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் காலை முதலே அதிகரிக்கத் தொடங்கியது. குற்றாலத்தில் தாற்காலிகக் கடைகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாகியுள்ளது.

அருவிக்கரை பகுதிகளை தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.சரத்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான அத்தியாவசியத் தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
            

குற்றாலத்தில் தீம் பார்க் உருவாக்கப்படும்

முதல்வர் ஜெயலலிதாவின் எளிமையைப் பலரும் பாராட்டுகின்றனர்" என்று சமீபத்திய தமிழகச் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவான நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தென்காசியில் அளித்த பேட்டி பின்வருமாறு:
"தமிழக மக்கள் மாற்றம் விரும்பி வாக்களித்துள்ளனர். நல்ல ஆட்சி அமைந்துள்ளது என்று நிம்மதியடைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா தனது சுற்றுப்பயணம் மற்றும்  போக்குவரத்தின்போது பொதுமக்களுக்கு எந்த இடையூறும் விளைவிக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளார். இலவச அரிசி திட்டத்தைக் கூட எளிமையாக நடத்துகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவின் எளிமைக்குப் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர். தென்காசி தொகுதியில் குடிநீர், சாலை, மின்விளக்கு பிரச்னைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்னைகள் மற்றும் அரசு மருத்துவமனை மேம்பாடு போன்றவற்றில் போர்க்கால நடவடிக்கை எடுக்க அமைச்சர்களை வலியுறுத்துவேன்.
உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கொள்கை உடையவன் நான். உழைப்பின் மீது அதிக நம்பிக்கை உள்ளவன். அது வீண்போகாது. தமிழ்நாட்டில் நடிகராக பல்வேறு கட்டங்களைத் தாண்டிவந்த நான் சிறந்த எம்எல்ஏவாக செயல்படுவேன். குற்றாலத்தில் தீம் பார்க் உருவாக்கப்படும்.  தென்காசி தொகுதிக்கு என்னென்ன தேவைகள் என்பது குறித்து மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும்.  மின்வெட்டு, மணல் பிரச்னை, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றில் முதல்வர் நல்ல முடிவெடுப்பார்."

இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சமக நிர்வாகிகள் காளிதாசன், ஜெயப்பிரகாஷ், விவேகானந்தன், சண்முகசுந்தரம், மாடசாமி, முத்துக்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

சரத்குமார் எம்.எல்.ஏ. அதிரடி ஆய்வு

தென்காசி,மே.31- 
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சரத்குமார் எம்.எல்.ஏ. அதிரடி ஆய்வு மேற்கொண்டார். தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான ஆர்.சரத்குமார் கடந்த 2 நாட்களாக தென்காசி தொகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். 

இன்று காலை அவர் தென்காசியில் 32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்தார். காண்டிராக்டர்களை நேரில் அழைத்து பணிகளை துரிதமாக முடிக்க அறிவுரை வழங்கினார். தொடர்ந்து சர்வீஸ் ரோடு அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். ரெயில்வே நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட வேண்டிய பாலத்திற்கான பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் சர்வீஸ் ரோடு அமைப்படாததால் போக்குவரத்துக்கு ஏற்படும் சிரமங்களை எடுத்துக்கூறினர். 

தொடர்ந்து சரத்குமார் எம்.எல்.ஏ. தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஒவ்வொரு வார்டாக சுற்றி நோயாளிகளை நேரில் சந்தித்து மருத்துவமனையில் உள்ள நிறை, குறைகளை கேட்டறிந்தார். மருத்துவர்களை அழைத்து சிகிச்சை முறைகள் கேட்டறிந்தார். அப்போது சிலர் மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை உள்ளதாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக சரத்குமார் எம்.எல்.ஏ. உறுதியளித்தார். 

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தென்காசி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளிட்ட அதிநவீன கருவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மருத்துவமனையில் சுத்தமாக வைத்திருக்க நோயாளிகளும் ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர், செவிலியர், துப்புரவு பணியாளர் பற்றாக்குறை போக்கப்படும். அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு மருத்துவமனையில் இன்னும் தரம் உயர்த்தப்படும். ரெயில்வே மேம்பால பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும். சர்வீஸ் ரோடு 2 மாதத்தில் போடப்படும். தென்காசி தொகுதியில் கூட்டணி கட்சியினரையும் அழைத்து பேசி வளர்ச்சிக்காக பணிகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது மாவட்ட செயலாளர் தங்கராஜ், கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், தென்காசி நகர சமக செயலாளர் வில்சன், பாவ+ர்சத்திரம் நகர செயலாளர் காந்திராஜ், அதிமுக நகர செயலாளர் முத்துகுமார், வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமிபாண்டியன், பொருளாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மாதத்தில் 20 நாட்கள் தொகு தியில் செலவழிப்பேன்

போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்று தெம்பாக இருக்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற அவரை சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அமைதியாக பதில் அளித்தார்.

பண பலம், படைபலம் ஆகியவற்றை மீறி இரண்டு தொகுதிகளில் எப்படி வெற்றி பெற்றீர்கள்?

‘‘ 1977-ம் ஆண்டில் இருந்து கருப்பசாமிபாண்டியன் அரசியலில் இருக்கிறார். அதிலும் ஆளும் கட்சி வேட்பாளர் என்றால் சொல்லவே வேண்டாம். அ.தி.மு.க.வின் கூ ட்டணி பலம், நாங்கள் வகுத்த வியூகங்கள், ‘கரப்ட்’ ஆகிப்போன தி.மு.க. ஆட்சியை மாற்றியே ஆகவேண்டும் என்கிற உணர்வு, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் க டுமையான உழைப்பு தென்காசியிலும், நாங்குனேரியிலும் வெற்றி பெறச் செய்திருக்கிறது.’’

தி.மு.க. கூட்டணியின் மிக மோசமான தோல்விக்கு உண்மையான காரணம் என்று எதைக் கூறுகிறீர்கள் ?

‘‘மாநிலத்திலும் மத்தியிலும் கலைஞரின் குடும்பத்தினர்தான் எல்லாப் பதவிகளையும் பங்கு போட்டுக் கொண்டனர் என்பது ஊரறிந்த உண்மை. அந்தப் பதவிகளை வைத்துக் கொண்டு ஊழல்களை வளர்த்தார்கள். கோடிகளில் விளையாடியதால் அவர்களுக்குள்ளேயே பூசல். அளவுக்கு மீறிய லஞ்ச ஊழலும், ஆட்டமும், சர்வாதிகாரப் போக்கும், தாங்க முடியாத அளவுக்குப் போனதால், ஒரு மௌனப் புரட்சி நடத்தி தி.மு.க.வை தோற்கடித்திருக்கிறார்கள் மக்கள்.’’

‘என் மகன், பேரப்பிள்ளைகள் சினிமாவுக்கு வரக் கூடாதா’ என்று சில உதாரணத்துடன் கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார். நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் அதற்கு உங்கள் பதில் என்ன?

‘‘ மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேஷ்முக்கின் மகன் விதேஷ் தேஷ்முக் நடிகர்தான். அங்கு சினிமா தொழில் பாதித்ததா? ராஜ்கபூர், ரிஷிகபூர், சசிகபூர், சம்மிகபூர், கரினாகபூர் வரை கபூர் குடும்பம் சினிமாவில் இருக்கிறது. அங்கு சினிமா பாதித்ததா?

பிரபு, தனுஷ், ரஜினி, ஏவிஎம். சரவணன் என கலைஞர் சொல்கிற கலை உலகத்தினர் ‘சிஎம்’ வீட்டுப் பிள்ளைகளாக இருந்து ஆதிக்கம் செலுத்தியவர்கள் அல்ல. பதிமூ ன்று வருஷம் கலைஞர் பதவியில் இல்லாமல் இருந்தபோது இந்தப் பிள்ளைகளும் பேரன்களும் சினிமா படங்கள் எடுத்தார்களா? ஏன் எடுக்கவில்லை? அப்போது பணம் இல்லாமல் போனதா?’’

பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் படுதோல்வி அடைவார்கள் என்று எதிர்பார்த்தீர்களா?’

‘‘கொள்கை அடிப்படையில் இல்லாமல் எத்தனை இடங்கள் பெறலாம் என்று கணக்குப் போட்டு நின்று தோற்றார்கள். கலை உலக சகோதரர்களை திட்டுவதையே கொள்கையாகக் கொண்ட ராமதாஸ் இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் நல்லது.’’

ஈழத்தமிழர்கள் பிரச்னையும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணம் என சொல்லலாமா?

‘‘நிச்சயமாகச் சொல்லலாம். நமது சொந்தங்கள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் கலைஞர் ஆடம்பர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது மறக்கக்கூடியதா? படு கொலையைத் தடுத்து நிறுத்த முற்படாமல் பாசாங்கு காட்டிய அவரை எப்படி மறக்க முடியும்? ‘ஈழத்தமிழருக்கு துரோகம் செய்த காங்கிரஸையும், துணை போன தி.மு.க.வையும் தோற்கடிப்பேன்’ என சூளுரைத்த சகோதரர் சீமானின் கடுமையான முயற்சியும் அந்தக் கூட்டணி வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.’’

விஜயகாந்தை சந்தித்துப் பேசியிருக்கிறீர்களே, கலை உலகம் சம்பந்தமான பிரச்னைகள் பேசப்பட்டதா?

‘‘அவர் கூட்டணிக் கட்சிகளில் இருக்கிற ஒரு கட்சியின் தலைவர். நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர். இதன் அடிப்படையில் அவரைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எந்தவித அரசியல் சாயமும் பூசாமல் அவர்களின் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.’’

ஊழல் செய்தவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள களத்தில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறதே?

‘‘ஊழல் செய்தவர்கள், ஊரை அடித்து உலையில் போட்டவர்கள், அடியாட்களை வைத்து நில அபகரிப்புச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை தண்டித்தே ஆகவேண்டும். தமிழகத்தில் தோண்டத் தோண்ட ஊழல்கள் பூதாகரமாக வந்து கொண்டே இருக்கும். உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய ஊழலைச் செய்தவர் முன்னாள் மத்திய மந்திரி ராஜா என்று, உலக அளவில் தமிழகத்தின் பெயர் கெட்டுப் போய் இருக்கிறது. இவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளின் வழியாக தப்பித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.’’

சமத்துவ மக்கள் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?


‘‘கட்சியின் அடித்தளம் வலுப்படுத்தப்படும். கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டப்படும். தமிழக மக்களுக்கும் குறிப்பாக, தென்காசி, நாங்குனேரி தொகுதி மக்களுக்காகவும் எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.



மக்களுக்காக எங்களை அர்ப்பணித்திருக்கிறோம். சட்டசபைப் பணிகள் இல்லாத காலத்தில் நான் தொகுதியில்தான் இருப்பேன். எப்படியும் மாதத்தில் 20 நாட்கள் தொகு தியில் செலவழிப்பேன். கலை உலகப் பணியும் தொடரும்.’’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாரே?

‘‘திரையுலக மூத்த சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று எங்கள் இயக்கத்தின் சார்பிலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பிலும் பிரார்த்திக்கிறோம். அவர் பழைய பொலிவுடன் மீண்டும் நிச்சயம் திரும்பி வருவார்’’ என்று முடித்துக் கொண்டார்.

- குமுதம் ரிப்போட்டர்