Tuesday, June 28, 2011

முதல்வருடன் சரத்குமார் சந்திப்பு

சென்னை, ஜூன்.28: 

இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, நடிகைகள் மனோரமா, குயிலி உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:  தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்தோம். 

இலங்கை அரசு மீது மத்திய அரசு உடனே பொருளாதார தடையை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை முதல்வரிடம் கேட்டோம்.மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தருமாறு முதல்வரிடம் வலியுறுத்தினோம். இப்போது பல்வேறு பணிகள் இருப்பதால், பாராட்டு விழாவை பிறகு நடத்தலாம் என்று அவர் கூறினார்.

கடந்த ஆட்சியில் சென்னையை அடுத்து பையனூரில் சினிமா தொழிலாளர்கள் வீடு கட்ட 7 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் சினிமா தொழிலாளர்கள் வீடு கட்ட முன்பணம் தர மறுக்கிறார்கள். அதனால் சொந்தமாகவே எங்களுக்கு நிலம் தர வேண்டுமென முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று சரத்குமார் கூறினார்.

No comments:

Post a Comment